திருப்பம்-13

 திருப்பம் -13



அனைத்தையும் அடக்கப்பட்டக் கோபத்துடன் பார்த்த வளவன் அமைதியாக இருக்க,


“ஏம்லே அமைதியாருக்க?” என்று தெய்வா கேட்டார்.


“ஓம்பேச்சுக்கு அவேம் மறுப்பானாம்மா? என்று திரிபுரா கேட்க,


“யாரைக்கேட்டு எம்முடிவ நீங்க எடுத்தீய?” என்று அடக்கப்பட்டக் கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.


“என்னம்லே?” என்று திரிபுரா அதிர்வாய் கேட்க,


“யாரைக் கேட்டு எம்முடிவ நீங்களா எடுத்துக்கிட்டீயனு கேட்டேம்” என்று கத்தினான்.


அவன் சப்தத்தில் வீடே ஒரு நொடி ஆட்டம் கண்டிருக்கும் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


“ஏ மக்கா.. அம்மா உன் நல்லதுக்குதேம்” என்று தெய்வா பேச வர,


“எது நல்லது?” என்று கத்தினான்.


அவர் பதறிக் கொண்டு பின்னே ஓரடி வைக்க,


“வளவா வெசனப்படாத. ஐயா பேசிகிடுதேம்” என்று சுயம்புலிங்கம் மகனை சமாதானம் செய்ய முன்வந்தார்.


“அவியட்ட பேசுற வார என்ன ஐயா செஞ்சீய?” என்று வலி நிறைந்தக் குரலில் அவன் கேட்க,


பெரியவர் மனம் வருந்தி மகனையும், கோபத்துடன் மனைவியையும் பார்த்தார்.


“லே..” என்று திரிபுரா ஏதோ பேச வர, விரல் நீட்டி பத்திரம் காட்டியவன், “அவிய அவிய, அவிய இஸ்டத்துக்குதேம் கட்டிருக்கீய. நாங் குறுக்கால வந்தேனா? கோம்பத்தனமா பேசாதீய. இது என் வாழ்க்க. எனக்கு அவோளத்தேம் புடிச்சிருக்கு. அவோளத்தேம் கட்டுவேம்” என்று மிக அழுத்தமாய் கூறினான்.


தெய்வா மகனை அதிர்ச்சியாய் பார்க்க, அவனது அழுத்தத்தில் திரிபுரா ஆடிதான் போனாள்.


விக்ரமனும் கூட மனைவிக்குப் பறிந்துதான் நடந்துகொள்வான் என்றாலும் அது வெளிப்படையாய் தெரியாது. இன்னும் திருமணம் கூட ஆகாத நிலையில், யாரோ ஒரு பெண்ணுக்காக தன்னைத் தன் மகன் எதிர்க்கின்றானே? என்று தெய்வாவிற்கு அத்தனைக் கோபமாக வந்தது. பழைமை எண்ணம் கொண்ட பல மாமியார் நினைப்பது, திருமணத்திற்குப் பிறகும் மகன்கள் தங்கள் கைக்குள் இருக்க வேண்டும் என்பதுதானே? அதுதான் அவரும் நினைத்தார். ஆனால் திருமணம் இன்னும் கூட ஆகிடாத நிலையில் அவளுக்காக மகன் தன் பேச்சை எதிர்ப்பது ஆத்திரத்தைக் கிளப்பியது. அதேநேரம் ஒரு தாயாக, மகன் ஆசையைத் தான் எதிர்த்தால் அவன் எதிர்காலம் வண்ணம் பெறுமா? என்ற அச்சமும் எழுந்தது.


மாமியார் என்ற பதவிக்கும், தாய் என்ற ஸ்தானத்திற்கும் இடையேவுள்ள அன்பு மற்றும் அதிகாரத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு நிலையில்லாமல் தத்தளித்தார்.


“அம்மா சவட்டுமேனிக்கு பேசாதீய ம்மா. அவேம் இஸ்டபட்ட புள்ளைக்கு கட்டிவச்சீயனாதேம் அவேம் சந்தோசமா இருப்பியான்” என்று விக்ரமன் பேச,


“இதுக்கு மேல ஒருத்தரும் பேச வேணாம். அந்த புள்ளதேம் இந்தூட்டு மருமவ. அதை யாராது மாத்த நினைச்சீயனா” என்று அழுத்தமாய் கூறித் தன் மகளையும், மனைவியையும் பார்த்த சுயம்புலிங்கம், “என்னை மீறி பண்ண மாட்டீயனு நம்புதேம். அப்படி ஒன்னு நடக்குறதா இருந்தா, நான் இல்லனு நினைச்சுடுவ” என்றுவிட்டுத் தோளில் உள்ளத் துண்டை உதறிக் கொண்டு உள்ளே சென்றார்.


மனைவி பேசும் முன்பே இதையெல்லாம் கூறியிருக்க வேண்டுமோ? என்று காலம் கடந்த ஞானம் உதித்தது அந்த பெரியவருக்கு.


கோபத்துடன் மாடிக்கு விரைந்த வளவன் சங்கமித்ராவிற்கு அழைத்திருக்க, முடிவெடுக்க இயலாமல் தடுமாறி வதைப்படுக்கொண்டு அவனையும் வதைத்து விட்டிருந்தாள்.


இத்தனைக்குப் பிறகும் அவள்மேல் அவனுக்குக் கோபம் வரவில்லை என்பது தான் விந்தையே! அவள் இடத்திலிருந்து யோசித்தான். அவள் குணம், பயம், நிலை என்று அனைத்தும் அவன் அறிந்தவொன்றே. எப்படியான வார்த்தைகள் அவளை நோக்கி வந்து திருமண முறிவுக்கு அவளை ஒப்புக்கொள்ள வைத்திருக்கும் என்பதை யூகிக்க அவனுக்கு தனி மூளை ஒன்றும் தேவைப்பட்டிருக்கவில்லை.


தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்துவிட்டான்.


விடயம் அறிந்து, அதிர்ந்து மகாதேவன், தீபிகா மற்றும் வடிவேலு வர, கீழே பெரும் வாக்குவாதம் சென்றது.


அனைத்தும் காதில் விழுந்தாலும் அவன் கீழே செல்லவில்லை. ஆத்திரமாக வந்தது. நிலையாக செயலாற்ற இயலாது அப்படியே அமர்ந்துவிட்டான்.


இறுக்கமாய் அமர்ந்திருந்தவன் தோளில் வடிவேல் கரம் வைக்க, சிவந்தக் கண்களைப் பிரித்து, இமை திறந்து அவனை நோக்கினான்.


“ஒன்னுமில்லலே” என்று வடிவேலு கூற,


“செத்துறுப்பாலே இந்நேரத்துக்கு” என்று உடையத்துடித்தக் குரலில் கூறினான்.


வடிவேல் வேதனையாய் நண்பனைப் பார்த்தான்.


“ஏ மக்ளே என்னம்லே வெசனம் வேண்டி கெடக்கு ஒனக்கு?” என்றபடி மகாதேவன் அங்கு வர,


“அத்தான்” என்று குரல் கமர அழைத்தான்.


“நாங்க இம்புட்டு பேரு இருக்கம். அப்புடி விட்டுபுடுவமா?” என்று கூறியபடி தீபிகா வர,


கண்களை மூடிக் கொண்டு தலை கவிழ்ந்தான்.


அவன் தோள் தட்டிய மகாதேவன், “அவிய பக்கட்டுருந்து யோசிலே. மகேன்போல பாத்துகிட்ட மருமவன தூக்கி வீசுனு சொன்னா யாருக்குதான் கோவம் வராது? அந்த கோவத்துல பேசிருப்பாவ. நீ வெசனப்படாதலே. ரெண்டு நா ஆறபோட்டு பேச்ச எடுப்பம். நம்ம பக்கட்டுருந்து மன்னிப்பு கேட்டுகிட்டா முடிஞ்சுபோவும்” என்று கூற,


பெருமூச்சுடன் தலையசைத்தான்.


அனைவரும் அவனைப் பாவமாய் பார்க்க, தன் இரட்டையன் மனநிலையை உணரப் பெற்ற திருவிக்ரமன், “ஏ மக்கா அவேன தனியாருக்க வுடுங்க” என்று கூறினான்.


அவன் தோளில் ஆதரவாய் தட்டிவிட்டு அணைவரும் நகர, மண்டியிட்டு அமர்ந்து தன் இரட்டையணை இறுக அணைத்துக் கொண்டவன், “அந்த புள்ளதாம்லே ஒனக்கு. யாரு தடுத்துடப் போறாவ? நான் இல்லியா? தட்டித்தூக்கிட்டு வானா வந்துடப்போறேம்” என்று கூறினான்.


கண்ணோரம் கண்ணீர்த்துளி கோடாய் வழியத் தன் இரட்டையணை மிக இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.


“எல்லாம் சரியாப்போவும்லே” என்று அவனுக்குத் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்த திருவிக்ரமன் கீழேச் செல்ல, பெருமூச்சுடன் இருள்வானை வெறித்தபடி சாய்ந்தமர்ந்தான்.


மனம் இன்னுமே அவன் பேச்சைக் கேட்க மாட்டேன் என்று தவித்தது. விரைந்து எழுந்தவன் கீழேவர, தெய்வாவும் திரிபுராவும் புலம்பிக் கொண்டிருந்தனர்.


எதையுமே கவனத்தில் கொள்ளாது வெளியே சென்றவன் வந்து நின்றதென்னவோ அவர்களது மாட்டு கொட்டகைக்குத்தான்.


கொட்டகையின் தாழ்ப்பாளைத் திறந்தவன், “லே நந்தி” என்க,


கதவைத் தன் கொம்பால் திறந்துத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான், காரிருளின் மையைப் பூசிக் கொண்டதைப்போலிருக்கும் அவர்களது காளைமாடான நந்தி.


அவன் கழுத்துப் பட்டியைப் பற்றிக் கொண்டு வயலோரமாய் வளவன் நடக்க, யாரையும் அருகேகூட சேர்த்துக்கொள்ளாத நந்தி, தன் பாசம்மிகுந்த எஜமானனின் இழுப்பிற்கு இசைந்தபடி நடந்து சென்றான்.


சில நிமிடங்கள் நந்தியுடன் நடந்துவிட்டு வந்தவன், திண்டில் அமர்ந்துகொண்டு நந்தியை வருட, அவனை முகர்ந்து பார்த்த மாடும், அவன் முகத்தோடு தன் முகம் இழைத்து அவன் சோகம் உணர்ந்ததை வெளிப்படுத்தியது.


“எனக்குத்தெரியும் லே? அவோள..” என்று தன் நெஞ்சை நீவிக் கொண்ட வளவன், “பயந்துவருதுலே” என்க,


அவன் முகத்தோடு முகம் முட்டி, “மா..” என்று சப்தம் கொடுத்தது.


அதன் ஒலி அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாய், அப்படியே திண்டில் படுத்தவன் அருகே கீழே நந்தியும் படுத்துக் கொள்ள, அதன்மேல் கைப்போட்டுப் படுத்தபடி, “அவோ வோணும்லே” என்றான்.


தன் தலையை மேலும் கீழுமாய் ஆட்டிய மாடு, அவன் கன்னத்தில் தன் நாவால் வருட, அதனைத் தட்டிக்கொடுத்தான்.


“துடிச்சிருப்பாளே நந்தி. வாயத்தொறந்து பேசக்கூட மாட்டியாளே” என்று இந்த சொற்ப நாட்களில் அவளைப் பற்றி உணர்ந்தவனாய் வருத்தம் கொண்டவன், அவளுடன் இரவுப் பயணம் சென்றதையெல்லாம் மனதோடு ஓட்டிப் பார்த்தான்.


“ஓம் மைணிய எங்கூட சேத்து வச்சுடுவாவளாலே நந்தி?” என்று அவன் வருத்தமாய் கேட்க,


“ம்மா..” என்று நந்தி சப்தம் எழுப்பினான்.


“ஏம்லே அம்மா இப்புடி யோசிக்காவ? வெசனமாருக்குதுலே. அவோ ஐயாவும் ஒரேடியா வேணாமுங்காவ. இதுக்காலே பத்துநா அப்புடி.. அப்புடி ரசிச்சோம்?” என்று கேட்கையில் வளவனையும் மீறி அவன் விழியோரம் நீர் வழிய,


அந்த இருளிலும் கூட அதை உணர்ந்ததைப் போல் நந்தி அவன் கன்னத்தில் தன் நா கொண்டு வருடி கண்ணீர் துடைத்தான்.


அவனுக்கும் நந்திக்கும் உள்ள ஆத்ம பினைப்பது. நந்தி மாடு என்பது ஒன்றுதான் வித்தியாசம். மற்றபடி இருவரும் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளைப் போன்றுதான் தங்களை உணர்ந்து கொண்டனர்.


அதனால் தான் வளவனின் சோகத்தை நந்தியால் புரிந்துகொள்ள இயன்றது.


நந்தியின் துணை நாடி வந்த வளவனுக்கான துணையை நந்தியின் இருப்பு வழங்க, சோகத்தின் சுவடோடு படுத்தான்.


உள்ளிருந்து மற்றொரு மாடு வருவதுத் தெரிய, லேசாய் தலையை நிமிர்ந்தவன், “லே முனியா.. உள்ளக்கப் போ” என்க,


“ஏம்போனும்? நீயு ஓம் நந்திய கொஞ்சுர தானம்லே? ஏம் முனியன உள்ளக்கப் போவச்சொல்லித் தவிக்கச் சொல்றீயளோ?” என்று கேட்டபடி விக்ரமன் அங்கு வந்தான்.


அவன் குரலில் வளவன் எழுந்து அமர, முனியைத் தடவிக் கொடுத்தபடி அங்கே வந்த விக்ரமன் அவன் அருகே அமர்ந்துக் கொண்டான்.


அடுத்துக் கருப்பன் வருவதன் மணியோசைக் கேட்க, எதிரே வடிவேல் வருவதைப் பார்த்தான்.


தானும் வந்து ஜோதியில் ஐக்கியமான வடிவேல், கருப்பனைத் தடவிக் கொடுத்தபடி, “என்னம்லே நந்தி.. ஓம் அண்ணே ரொம்ப அழுறாவளோ?” என்க,


நந்தி மேலும் கீழுமாய் தலையசைத்து, “ம்மா..” என்று சப்தமெழுப்பியது.


“கத்தாதம்லே.. உள்ளக்க ஓம் புள்ளையலாம் தூங்குறாவத்தான?” என்று விக்ரமன் கூற,


“அவேன ஏம்லே அறுப்புத (திட்டுற)?” என்று வளவன் கேட்டான்.


“இஞ்சார்ரா..” என்று விக்ரமனும் வடிவேலும் கூற,


மாடுகள் மூன்றும் அவர்கள் காலடியிலேயே படுத்துக் கொண்டன.


“வருந்தாதல்லே” என்று வடிவேல் கூற,


“என்னலே இப்புடிலாம் ஆவுது? எப்புடிலாம் இருந்துச்சு தெரியுமா இந்த பத்து நா(ள்)” என்று வருத்தமாய் கேட்டான்.


“கல்யாணமுன்னா என்னமாது ஒடக்கு வாரதுதாம்லே.. இந்தா கார்த்திகூட நானுந்தேம் ஜாலியா போனெல்லாம் பேசினேம். அவிய வீட்டுல என்னமோ ஒடக்குனு அது எங்கக் கல்யாணத்துல விடிஞ்சு ஒரு வாரம் சரசமா போவலியா? என்ன ஒங்களவு கல்யாணமே இல்லனு அவளதேம். சும்மா பேச்சுக்கு சாவடிச்சுடுவேம்னு சொல்றோம். செஞ்சுபுடுதோமா? அப்படித்தாம்லே இதுவும்” என்று தம்பிக்கு விக்ரமன் ஆறுதல் கூற,


“அனுபவஸ்தரு சொல்றாவ. கேட்டுகிடுலே” என்று வடிவேல் கூறினான்.


“ஏம்லே.. எங்களுக்காது அவிய அம்மா. ஒனக்கு மாமியா.. என்னமாதுனா ஆஞ்சுபுடுவாவ” என்று விக்ரமன் அவன் காதோரம் மெல்லமாய் முனுமுனுக்க,


“என்ன அம்மைய காட்டி மெரட்டுதீயாக்கும்?” என்று பீதியாய் தானும் மெல்லிய ஒலியில் அவனிடம் கேட்டவன், “இஞ்சாரு.. நீங்கதேம் லச்சுவ எங்கிட்டக் கட்டிவச்சு அனுப்பப் போறீய. ஏதோ நான் ஓங்க வீட்டுக்குக் கட்டிவாராப்ல சொல்றீய” என்றான்.


அதில் விக்ரம் பக்கென்று சிரித்திட, வளவன் அவனை விநோதமான பார்வை பார்த்தான்.


அதில் வடிவேல் பீதியடைய, சமாளிக்கும் விதமாய் அவன் தோளில் தட்டிக் கொடுத்த விக்ரம், “எல்லாம் சுளுவா முடிஞ்சுப்போவும்” என்க,


“நாங்க இருக்கம்லே” என்று வடிவேலும் ஆறுதல் கூறினான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02