திருப்பம்-50

 திருப்பம்-50



நேரம் அதன் இசைவில் நகர, மாலை வேளை திரிபுரா வந்து சேர்ந்தாள்.


அவள் வந்தாளே தெய்வாவிற்கும் சங்கமித்ராவிற்கும் இடையே கலவரம் மூண்டுவிடுவது வலமை என்பதால், சங்கமித்ரா ஒருவித படபடப்புடனே இருந்தாள்.


நாளும் பொழுதும் கடக்கும் சிறுசிறு சண்டைகளும் கூட, திரிபுரா இருந்தால் பூதாகரமாய் அமையும். அதனாலேயே வாக்குவதாங்களைத் தவிர்த்திடும் முனைப்போடு அமைதியாக இருந்தாள் பெண்.


திரிபுராவைப் பார்த்ததும் அவிநாஷின் குறுஞ்செய்தி நினைவு வந்தோனாய், “அக்கா நாளைக்கு ரெடியாயி இங்கன வந்துடு. எல்லாம் ஒன்னா போயிடலாம்” என்று வளவன் கூறினான்.


“நான் வரலலே. நீங்க போயி வாங்க” என்று திரிபுரா கூற,


“அன்..மைணி ஏன் மைணி? நீங்களும் வாங்க” என்று சங்கமித்ரா கூறினாள்.


அவள் வரவில்லை என்றதும், பரபரப்பாய் அழைத்தவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தான் எதாவது பேசி அவர் எதாவது தவறாக புரிந்துகொள்வாரோ? என்ற அச்சத்தில் என்ன பேசுவதன்று தெரியாது விழித்தாள். இதில் அண்ணிக்கும் மைணிக்கும் இடையான தடுமாற்றம் வேறு வந்து தொலைத்தது. 


“இல்லத்தா.. நீங்க போய் வாங்க” என்று திரிபுரா கூற,


“அக்கா நீயா ஏதும் நெனச்சுக்காதக்கா. அண்ணே எனக்கு தனியா அழச்சு அக்காவ கண்டிப்பா கூட்டி வாயா. அவிய ஆசிர்வாதம் எம்புள்ளைக்கும் பொஞ்சாதிக்கும் வேணுமின்னு கேட்டாவ” என்று வளவன் கூறினான்.


அவன் செய்தியில் சுயம்புலிங்கம் நெகிழ்ந்துபோய் நோக்க,


“அவிய ஏதும் சொல்லுவாவனு நாஞ்சொல்லலைலே. எனக்குந்தெரியும் அவோ ஒன்னுஞ்சொல்ல மாட்டாவனு. அவிய அழச்சதுலயே தெரிஞ்சுது” என்றாள்.


“அப்றம் ஏம்மைணி வரமாட்டேங்குறீங்க. நீங்க வந்தா சங்கி ரொம்ப சந்தோஷப்படுவா” என்று சங்கமித்ரா கூற,


“வாரவக எல்லாம் அப்புடி நெனக்க மாட்டாவ புள்ள” என்றவள் வளவனைப் பார்த்து, “வற்புறுத்தாதைய்யா. அவியளுக்கும் புள்ளைக்கும் எங்க ஆசிர்வாதம் கண்டிப்பா உண்டு. ஆனா வந்து, யாரும் நாலு வார்த்த பேசிபுட்டா நாஞ்சும்மாருக்குற ஆளுயில்ல. எகன மொகனயா பேசிபுடுவேம். அந்த புள்ள சடங்குல தேவையில்லாத பிரச்சனையாயிப்போவும். எனக்குஞ்சரி, அவியளுக்குஞ்சரி அதுல விருப்பமில்ல. அந்த மனுஷந்தேன் வீடு தேடி அழைச்சுருக்காவ, மொய்யாது ஏதும் கொடுத்தனுப்பு ஓந்தம்பிட்டனு சொன்னாரு. அதேம் அதயெடுத்துட்டு வந்தேம். சொவமா புள்ளைய பெத்து எடுக்கட்டும். நீ குடுத்துபுடு இத” என்று நீட்டினாள்.


அனைவருக்குமே அந்த நிமிடம் பெரும் கனமாக இருந்தது.


திரிபுராவின் குணம் கொஞ்சம் பிசிறாக இருந்தாலும்கூட, குழந்தை விடயத்தில் அவளுக்கிருந்த தவிப்புகளை அங்குள்ள அனைவருமே பார்த்துள்ளனரே. அதனால் அதற்குமேல் அவளை வற்புறுத்தத் தோன்றவில்லை அவர்களுக்கு.


சரியென்று வளவன் அதை வாங்கிக் கொள்ள, சங்கமித்ராவைப் பார்த்து, “வேணுமின்னுதான் வராமருந்தேன்னு ஒன்னுக்கு ரெண்டா கூட்டிப்புடாத தாயி” என்றாள்.


“ச்ச.. அப்படிலாம் சொல்லமாட்டேன் மைணி” என்று சங்கமித்ரா கூற,


“ம்ம் ம்ம்.. வரேம்” என்று பொதுவாய் கூறிவிட்டுச் சென்றாள்.


“எம்புட்டு தவங்கெடுக்கேன். எம்பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கமாட்டுதே” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டு தெய்வா செல்ல,


“அவிய அவிய தலையில என்னருக்கோ அதுபடிதான நடக்கும்?” என்ற சுயம்புலிங்கம், “அந்தத் தம்பிய தப்பா நெனச்சுக்க வேணாமினு சொல்லிடுய்யா” என்று கூறினார்‌.


“ச்ச அண்ணே அப்படிலாம் நெனக்க மாட்டாவப்பா” என்று வளவன் கூற,


“ம்ம்..” என்ற பெருமூச்சுடன் எழுந்து சென்றார்.


“எகன மொகனயா பேசினாலுங்கூட அண்ணிக்கு புள்ளையனா கொள்ள பிரியம் சங்கு. நான் அசலூருக்காரினு என்னயுமே அவியளுக்கு அவாது. ஆனா நானு உண்டான சமயம் அம்புட்டு நல்லா பாத்துகிட்டாவ. என்ன உக்காத்தி வச்சு எல்லாஞ் செஞ்ச புண்ணியத்துக்காது அவியளுக்கு ஒரு புள்ள வரனும்முனுதேம் வேண்டிகிட்டேம்” என்று கார்த்திகா கூற,


“பாவம் க்கா” என்று வருத்தமாய் கூறினாள்.


அந்த சோக மனநிலையோடே அனைவரும் உறங்கச் செல்ல, வளவன் ரேடியோ கேசட்டை வைத்துத் திருகிக் கொண்டிருந்தான்.


குளித்து இரவு உடைக்கு மாறி வந்த மித்ரா, “என்னங்க பண்றீங்க?” என்று கேட்க,


“சும்மாடா. மோந்திக்கு அக்கா வந்து பேசிப்போனதுலருந்தே ஒருமாதிரி இருக்கா. அதேம் இதுல பாட்டு எதும் கேப்பமுனு பாத்துட்டுருக்கேம்” என்றான்.


“ஹ்ம்.. எனக்கும் ரொம்ப வருத்தமாருந்துதுங்க. ஆனா அண்ணி வந்துருக்கலாம். இப்படியே எல்லாம் ஒதுங்கினா பேசுறவங்களுக்கு அவங்களே காரணம் கொடுத்தாப்ல ஆகாதா?” என்று சங்கமித்ரா கேட்க,


“அக்கா அதொல்லாம் சும்மாருக்காது மித்ரா. நீ வேற. அடுத்தவிய பேசுவாவனு வரலைங்கலை. அவிய எதும் பேசினா இது சண்டைக்குப் போயிடும். கலவர பூமியாயிபோவுமுனு வேணாங்குது. கார்த்தி மைணி வளபூட்டுக்கு யாரோ என்னமோ சொல்ல, வச்சு கிழிச்சுவுட்ருச்சு. மைணிக்கு அதேம் மொதல வளபூட்டிச்சு. ஆனா அவிய பேசினதுக்கு ரொம்ப வெசனப்பட்டு கரிச்சுச்சு. புள்ள பொறந்ததும் நான் வளபூட்டி அதுக்கு என்னமும் ஆவிபோச்சா? ஒங்க எண்ணந்தேம் இன்னேரத்துக்கு வெந்துபோயிருக்கும்னு செம்ம போடு போட்டுச்சு” என்று பெருமை கலந்த புன்னகையுடனே கூறினான்.


“அம்மாடி” என்று சிரித்தவள், “சரியாதான் பேசிருக்காங்கங்க. இந்தமாதிரி ஆளுங்களுக்கு அண்ணி மாதிரி அடாவடி பதில் தான் சரி” என்று கூற,


“சந்துல சிந்துபாடுற கதையா எங்கக்காவ அடாவடினுட்ட பாத்தீயா? இரு போட்டுத் தாரேம்” என்றான்.


“ஆத்தாடி” என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டவள், “ஏற்கனவே எங்களுக்குள்ள ரொம்ப அழகாதான் போகுது உறவு. இந்தோ போற போக்குலயும் என்னை போட்டு தாக்கிட்டுத்தான போனாங்க” என்று அவள் கூற,


அதில் வாய்விட்டு சிரித்துக் கொண்டு கேசட் ஒன்றை உள்ளே செலுத்தினான்.


‘சங்கத்தில் பாடாத கவிதை உன்

அங்கத்தில் யார் தந்தது

சந்தத்தில் மாறாத நடையோடு என்

முன்னே யார் வந்தது

தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்

அங்கத்தில் யார் தந்தது


கையின்றே செங்காந்தழ் மலரே

நீ சொன்னால் நான் நம்பவோ

கால் என்றே செவ்வாழை இலைகளை

நீ சொன்னால் நான் நம்பி விடவோ

மை கொஞ்சம்.......

பொய் கொஞ்சம்........

கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்

காலத்தால் மூவாத உயர் தமிழ்

சங்கத்திலே....


அந்திப்போர் காணாத இளமை

ஆடட்டும் என் கைகளில்

சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்

சிந்தித் தேன் பாய்கின்ற உறவை

கொஞ்சம் தா..அ...

கொஞ்சம் தா..ஆ..

கண்ணுக்குள் என்னென்ன நளினம்

காலத்தால் மூவாத உயர் தமிழ்

சங்கத்திலே


ஆடை ஏன் உன் மேனி அழகை

ஆதிக்கம் செய்கின்றது

நாளைக்கே ஆனந்த விடுதலை

காணட்டும் காணாத உறவில்

கை தொட்டு...ஆ

மெய் தொட்டு..ஆ

சாமத்திலே தூங்காத விழிகளில்

சந்தித்தேன் என்னென்ன மயக்கம்

தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்

அங்கத்தில் யார் தந்தது’ என்ற பாடல் ஒலித்து அடங்க, வளவனின் பார்வை பாடல் வரிகளுக்கேற்ப மாறியது.


'ரைட்டு.. சிறுத்து சைலென்ட் ஆகுது' என்று நினைத்தவள், ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு மடல் எழுதத் துவங்கினாள்.


'அன்புள்ள திருமாலுக்கு,


பார்வை பறிமாற்றம் எல்லாம் பலமாதான் இருக்கு. ஆனா நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து ரெடியாகனும். அதனால உங்க சங்கக்கவிதையெல்லாம் நாளைக்குப் பாடிச்சுக்கோங்க. அப்றம் ஒன்னு.. நாளைக்கு எனக்கு வளைகாப்பு நடக்கும்போது.. நாளைக்குனா நாளைக்கே இல்லை. பியூச்சர்ல நடக்கும்போது நாம திரிபுரா அண்ணியவே முன்ன நின்னு நடத்த சொல்லுவோம். இது அவங்க மேல உள்ள கரிசனத்தால சொல்லலை. பலர் தயங்கும் விஷயத்தை ரொம்ப அழகா முறியடிச்சு காட்டின அவங்க செயல்விதத்துக்கு அடுத்த சான்றா நம்ம பிள்ளையும் அவங்க கண் பார்வையோடவே நல்லவிதமா பிறக்கும்னு காட்டுவோமேனு சொல்றேன். சரி சரி. எனக்கு தூக்கம் வருது. கையக்கால சும்மா வச்சுட்டு வந்துபடுங்க’ என்றெழுதி அந்தத் தாளை நீட்டினாள்.


அதை வாங்கி மேஜையில் வைத்தவன், அலமாரியிலிருந்து ஒரு பரிசுப்பெட்டியை எடுத்து நீட்ட, “ஏய் கிஃப்ட் வாங்கியாச்சா? எப்ப வாங்கினீங்க?” என்று ஆர்வமாய் அதை வாங்கினாள்.


சட்டென்று ஒரு சந்தேகம் தோன்ற, “எனக்குத்தானா இல்ல நாளைக்கு பங்ஷன்ல சங்கிக்கு குடுக்க வாங்கினதா?” என்று மித்ரா கேட்க,


“அதுக்கு வாங்கிருந்தா உங்கிட்ட கலந்து பேசாம வாங்கிருப்பனாடி?” என்று கேட்டான்.


“வாஸ்தவம் தான்” என்று கூறியவள், “என்னது?” என்று கேட்க,


“தொறந்து பாரேம்டி” என்று சிரித்தான்.


ஆர்வமாய் அதனை பிரித்தவள் பெட்டிக்குள்ளிருந்து அப்பரிசை எடுத்துப் பார்க்க, அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.


அதுவொரு ‘ரெசின் க்ளாக்'. கண்ணாடிபோன்ற திரவத்தால் செய்யப்படும் கலைபொருள் வகையைச் சேர்ந்தது. அதில் என்ன சிறப்பம்சம் என்றால், பன்னிரெண்டு மணிநேரத்திற்காகவும் காட்சிப்படுத்தப்படும் எண்களுக்குப் பதிலாக, அவள் கடிதத்தோடு வைத்துக் கொடுக்கும் சங்குப்பூக்களே வைக்கப்பட்டிருந்தது.


இருவரும் திருமணத்தின்போது, அக்னியை வலம் வரவேண்டி கரம் கோர்த்துக் கொண்டபோது, கோர்த்துக் கொண்ட கரத்தைமட்டும் புகைப்படமாய் படம் பிடித்திருக்க, அப்படத்தை கடிகாரத்தின் மையத்தில் ஒட்டியிருப்பதாய் அமைத்திருந்தான்.


“ஏங்க ரொம்ப அழகாருக்கு” என்று அதனை வருடியபடி அவள் கூற,


“இதைதான்டி கல்யாணத்தப்பவே கொடுக்கருந்தேம். ஆனா மறந்தே போச்சு. நீ கேக்கவுந்தேம் நெனவு வந்தது. ஒடனே சொல்லிவச்சு வாங்கிட்டேம்” என்று கூறினான்.


“பாருங்களேன். நான் நினைவு படுத்தினதும் ஒருவகையில நல்லதாப்போச்சு” என்று கூற,


“நெசந்தாம். வேலையில இப்புடி சிலது மறந்துபோவேம் மித்ரா. வெசனப்படாது நீயே நெனவு படுத்திட்டனா புடிச்சுட்டு சரியா செஞ்சு புடுவேம்” என்று கூறினான்.


அதில் புன்னகைத்துக் கொண்டு அந்த கடிதார்த்தை மாட்ட அவள் இடம் தேட, அவர்கள் படுக்கைக்கு நேரே உள்ள சுவரில், கொஞ்சம் உயரத்தில் ஒரு ஆணி இருந்தது.


“அதுல மாட்டு” என்று அவன் கூற,


அவனைத் தீயாய் முறைத்தவள், “அதுயெப்டி எனக்கு எட்டும். நீங்க மாட்டுங்க” என்றாள்.


அவளை அப்படியேத் தன் கைகளில் அள்ளிக் கொண்டவன், “இப்புடித்தேம் எட்டும்” என்று தூக்க,


“கீழ போட்டுடப்போறீங்கங்க” என்று பயத்தோடு கூறினாள்.


“நீ சட்டுனு மாட்டி முடிக்காட்ட, பொத்துனு போட்ருவேம்” என்று அவன் கூற,


அவசர அவசரமாய் அதை அந்த ஆணியில் ஒழுங்காக மாட்டினாள்.


அவளை மெல்ல அவன் கீழே இறக்க, “கொழுப்புதான உங்களுக்கு. இப்புடியா சட்டுனு தூக்குறது. அதைகீழ மேல போட்டிருந்தா என்னாகிருக்கும்” என்று கடிந்து கொண்டாள்.


“அடுத்தமொற இந்த வாயிக்கு ஒரு பூட்டுதாம்டி பரிசா வாங்கப்போறேம்” என்று அவன் கேலி செய்ய,


“அத எதுக்கு தனியா வாங்கிகிட்டு” என்று கேலியாய் கூறி சிரித்துவிட்டுச் சென்றாள்.


“ஆஹாங்? ஏற்கனவே இருக்குங்குறியா?” என்றவன் அவளை இழுத்து அணைத்தபடி கேட்க,


“இல்லையா பின்ன?” என்று நாணம் படர்ந்த குரலில் கூறினாள்.


“தெரியிலியே? டெஸ்ட் பண்ணிடுவோமா?” என்றவன், சோதனையை செயல்படுத்திமுடிக்க, அது கொடுத்த உவகையான விடையில், இனிய பல்லவியொன்று இசைந்து, கடிதம் எழுதியவளயே அதுகுறித்து மறக்க வைத்திருந்தான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02